காலில் விலங்கிட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் கைதி ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரண...
காலில் விலங்கிட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் கைதி ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக குறித்த நபர் விடுதி இலக்கம் 08இல் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை பெற்று வரும் கைதியை சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மனிதாபிமானமற்ற முறையில் கட்டிலுடன் விலங்கிட்டு உள்ளார். அதனால் குறித்த நபர் காலில் விலங்கு மாட்டப்பட்ட நிலையிலையே சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது குறித்து விடுதியில் சிகிச்சை பெற்று வரும் நபர் தெரிவிக்கையில் ,
விடுதியில் குறித்த நபரை அனுமதித்த நேரம் முதல் அவரது காலை கட்டிலுடன் இணைத்து சிறைச்சாலை உத்தியோகஸ்தர் விலங்கிட்டுள்ளார். விலங்கிட்ட பின்னர் குறித்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர் விடுதியில் தங்கி நில்லாது வேறு இடங்களுக்குச் சென்று விடுவார்.
இந்நிலையில் குறித்த நோயாளிக்கு இயற்கை உபாதைகள் ஏதேனும் ஏற்பட்டால் , அவர் மலசலகூடம் செல்ல முடியாத நிலையில் அவவருக்கு அருகில் இருக்கும் வேறு நோயாளிகள் தான் குறித்த சிறைச்சாலை உத்தியோகஸ்தரை தேடிச் சென்று அழைத்து வந்து நோயாளியை மலசல கூடம் அழைத்து செல்ல முடியும்.
அதேவேளை பார்வையாளர் நேரத்தின் போது கூட நோயாளியின் காலில் விலங்கிட்டு இருப்பதனால் , வேறு நோயாளிகளை பார்வையிட வருவோர் குறித்த நோயாளியை விசித்திரமாக பார்ப்பதனால் , அவமானத்தால் கூனிக் குறுகி பார்வையாளர் நேரம் முடிவடையும் வரையில் , அவர் தனது முகத்தினை மறைத்தவாறே இருப்பார்.
சிறைச்சாலை உத்தியோகஸ்தரின் மனிதாபிமானமற்ற இந்த செயலினால் குறித்த நோயாளி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் வைத்திய சாலை நிர்வாகமும் கவனத்தில் எடுக்காத நிலையே காணப்படுகின்றது என மேலும் தெரிவித்தார்.