வடக்கு ஆசிரிய இடமாற்றத்தில் பல தலையீடுகள். இன்னும் சீரழியப்போகிறது வடக்குக் கல்வி!!! கவலையோடு வேதனை தெரிவிக்கின்றது இலங்கைத் தமிழர் ஆச...
வடக்கு ஆசிரிய இடமாற்றத்தில் பல தலையீடுகள். இன்னும் சீரழியப்போகிறது வடக்குக் கல்வி!!!
கவலையோடு வேதனை தெரிவிக்கின்றது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்.
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஒன்பதாம் இடத்தில் இருந்து வருகின்ற வடக்கு மாகாணம் க.பொ.த உயர்தர பரீட்சையிலும் பின்னிலைக்குச் சென்றது. இதற்குப் பல காரணிகள் இருந்தாலும் ஆசிரிய பற்றாக்குறை, ஆசிரிய சமலிலையின்மை என்பன பிரதான காரணிகளாக உள்ளன.
இத்தகைய நிலைமைகளைச் சீர்செய்த பல்வேறு வழிமுறைகளை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சிடமும், வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திடமும் நாம் முன்வைத்தோம். அதன் அடிப்படையில் ஆசிரிய பரம்பலைச் சீராக்க வடமாகாணக் கல்வித் திணைக்களம் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல் போகின்றன.
வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பம் கோரி பரீட்சைகள் நடைபெற்ற நிலையில் அந்த நியமனங்கள் இதுவரையில் நடைபெறவில்லை. அத்தோடு ஆசிரிய பரம்பலைச் சீராக்க நடைபெறும் ஆசிரிய இடமாற்றங்களில் பல்வேறு தலையீடுகள் ஏற்படுகின்றன. அரசியல் தலையீடுகள், உயர்நிலை அதிகாரிகளின் தலையீடுகள், செல்வந்தர்களின் தலையீடுகள் என வகை அறியமுடியாதவர்களின் தலையீடுகள் தாண்டவமாடுகின்றது.
ஆசிரிய இடமாற்றச் சபை மூலமே ஆசிரிய இடமாற்றங்கள் நடைபெற வேண்டும் என தாபன விதிக்கோவையும், சுற்றறிக்கையும் சொல்கின்ற நிலையில் இடமாற்ற சபைகள் வலுவிழந்து மேற்சொன்னவர்களின் செல்வாக்குகளே மேலோங்கி நிற்கின்றன. அதிகாரிகள் தட்டிக்கழிக்க முடியாத அளவுக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் செல்வாக்குள்ளவர்கள் சுகபோகங்களை அனுபவிக்க உண்மையான கடமையுணர்வுள்ள ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தமது மேனிலைத் தன்மைகளைப் பிரயோகிக்கும் நபர்கள் தொடர்பாக எமக்குத் தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. அவர்களைநாம் வெளிப்படுத்தவேண்டிய தேவை ஏற்படுகின்றது. ஆகையால் தயவு செய்து வடக்கு மாகாணத்தின் கல்வி நடவடிக்கைகள் ஒரு ஒழுங்குமுறையான வழிகளுக்கூடாக இனியாவது முன்னெடுக்க எல்லோரும் ஒத்துழைக்கவேண்டும். இல்லையெனில் வடக்கு மாகாணப் பிள்ளைகளின் கல்வி கேள்விக்குறியாகும்.
இதைவிட வேடிக்கை என்னவென்றால் மாகாணக் கல்வித் திணைக்களத்தில் உள்ள எழுதுவினைஞரான பெண்மணிக்கு பல தடவைகள் இடமாற்றம் வழங்கப்பட்டும் வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தைவிட்டு செல்லாமல் இருப்பது மட்டுமன்றி இடமாற்றம் தொடர்பான சகல நடவடிக்கைகளுக்கும் அவரே பொறுப்பாக இருந்து கொண்டு மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் செல்கின்ற ஆசிரியர்களை இடைமறித்து மிகமோசமாக நடந்துகொள்கின்றார். இந்த விடயம் தொடர்பாக பல ஆசிரியர்கள் கல்வி அமைச்சிற்கு பல தடவைகள் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணம் இணைந்து இயங்கிய காலத்தில் இருந்து மாகாணக் கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற இந்த எழுதுவினைஞரால் பல ஆசிரியர்கள் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இவரது இடமாற்றம் இம்முறை நடைபெறவில்லையென்றால் ஆசிரியர்களும் தமது கௌரவங்களைப் புறந்தள்ளி நடந்துகொள்ளும் சூழ்நிலை ஏற்படும் என சங்கம் எச்சரித்துள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.