பொன்னாலையில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாகத் திருத்தப்படாமல் மோசமாகச் சேதமடைந்துள்ள வீதிகளை வலி.மேற்கு பிரதேச சபை தவிசாளர் த.நடனேந்திர...
பொன்னாலையில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாகத் திருத்தப்படாமல் மோசமாகச் சேதமடைந்துள்ள வீதிகளை வலி.மேற்கு பிரதேச சபை தவிசாளர் த.நடனேந்திரன் மற்றும் செயலாளர் கி.விஜயேஸ்வரன் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர்.
குறிப்பாக, பொன்னாலை இந்து மயானத்திற்குச் செல்லும் வீதி மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத அளவிற்கு மோசமாகச் சேதமடைந்துள்ளது.
குறித்த வீதியூடாக இரவு நேரங்களில் கடற்றொழிலுக்குச் செல்லும் தொழிலாளர்கள், மயானத்திற்குச் சடலங்களைக் கொண்டுசெல்லும் பொதுமக்கள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டுசெல்வோர் என பலதரப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறித்த வீதியைத் திருத்தம் செய்து தருமாறு பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசா பிரதேச சபைக் கூட்டங்களில் அடிக்கடி கோரிக்கை விடுத்து வந்தார்.
பொன்னாலை பிரதேசம் 17 வருடங்களாக கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்தமையால் அப்போது இங்கு எந்தவித அபிவிருத்தி நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்பதால் இப்பிரதேசத்திற்கு அபிவிருத்தியில் முன்னுரிமை கொடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தவிசாளரும் செயலாளரும் நேரடியாக வருகைதந்து வீதியைப் பார்வையிட்டனர். இந்த வீதியை விரைவாகப் புனரமைப்பதற்கு தாங்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், பொன்னாலை மேற்கு மக்கள் நன்னீர் எடுப்பதற்கு செல்லும் சனசமூக நிலைய கிளை வீதியும் மோசமாகச் சேதமடைந்திருந்த நிலையில் அந்த வீதியையும் பொன்னாலை தெற்கில் வனந்தரன் வீதியையும் அவர்கள் பார்வையிட்டனர். இந்த வீதிகளின் திருத்தம் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.