நியூசிலாந்தில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் ஒருவர் மரணித்துள்ளார். இது தடுப்பூசியுடன் தொடர்புடைய மரணம் எனக் கரு...
நியூசிலாந்தில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் ஒருவர் மரணித்துள்ளார். இது தடுப்பூசியுடன் தொடர்புடைய மரணம் எனக் கருதப்படுகிறது.
தடுப்பூசியால் இதயத் தசையில் வீக்கம் ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என்று தடுப்பூசி கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே இருந்த உடல் பிரச்னைகளும் தடுப்பூசி போடப்பட்டதால் தூண்டப்பட்டிருக்கலாம் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தடுப்பூசியால் இதயத் தசையில் வீக்கம் ஏற்படுவது மிகவும் அரிதானது என்று ஐரோப்பிய தடுப்பூசி ஒழுங்கமைப்புகள் கூறுகின்றன. தடுப்பூசியால் ஏற்படும் பலன்களைப் பார்க்கும்போது அதனால் ஏற்படும் அபாயம் ஒன்றுமில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பைசர், மொரடர்னா ஆகிய இரு நிறுவனங்களின் தடுப்பூசிகளால் மிக அரிதான மையோகார்டிட்டிஸ் என்ற பக்கவிளைவு ஏற்படுவதாக ஐரோப்பிய மருந்து அமைப்பு தெரிவித்திருந்தது. இவை இளம் வயது ஆண்கள் மத்தியில் அதிகமாக இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தடுப்பூசியால்தான் மரணம் நேர்ந்தது என்பதை அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆனால், “மையோகார்டிட்டிஸ்” எனப்படும் இதயச் தசை வீக்கமானது பெரும்பாலும் தடுப்பூசியால் ஏற்பட்டிருக்கவே வாய்ப்பிருக்கிறது என்று தடுப்பூசி கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
“நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவால் உயிரிழப்பு ஏற்படுவது இதுவே முதல் முறையாகும். தடுப்பூசியின் பாதகமான எதிர்வினைகளைக் கண்காணிக்கும் அமைப்பு தடுப்பூசி போட்டப்பட்ட பிறகு இறந்த மற்றவர்களின் அறிக்கையையும் ஆய்வு செய்திருக்கிறது. ஆனால் அவை எதுவும் தடுப்பூசியால் ஏற்பட்ட மரணங்கள் அல்ல.” என்று அந்த அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.