ஊர்காவற்றுறை – காரைநகர் பாதையை திருத்துவதற்கான பொருட்கள் எடுத்துவரப்பட்டுள்ள நிலையில் விரைவில் திருத்த வேலைகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட...
ஊர்காவற்றுறை – காரைநகர் பாதையை திருத்துவதற்கான பொருட்கள் எடுத்துவரப்பட்டுள்ள நிலையில் விரைவில் திருத்த வேலைகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தட்டுக்கள் பழுதடைந்தமை மற்றும் கேபிள் அறுந்தமை போன்ற காரணங்களால் கடந்த ஒன்றரை மாதங்களாக பாதைச்சேவை இடம்பெறவில்லை.
இதனால் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் பெரும் சிரமங்களுடனேயே பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 15 ஆம் திகதி ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் முக்கிய பேசுபொருளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஊர்காவற்றுறை – காரைநகர் இடையிலான கடல் பாதையை திருத்தியமைப்பதற்காக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உதிரிப்பாகங்கள் சில நாட்களுக்கு முன்னர் கொழும்பை வந்தடைந்த நிலையில், தற்போது யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
திருத்தப்பணிகளுக்கு இரண்டு வாரங்கள் தேவைப்படுமென்பதால் கடல் பாதை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும் வரையில், கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது ஒழுங்குபடுத்தப்பட்ட படகுப் போக்குவரத்து சேவை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.