வவுனியா பல்கலைக்கழக மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள நீர்நிலையில் இருந்து இரு மாணவர்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டது. இன்று மாலை இடம்பெற்ற...
வவுனியா பல்கலைக்கழக மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள நீர்நிலையில் இருந்து இரு மாணவர்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டது.
இன்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்….
வவுனியா தெற்கு கல்விவலயத்தின் வலயமட்ட விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள் பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியாப் பல்கலைக்கழகத்தின் மைதானத்தில் இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள தற்காக வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் இருவர் மைதானத்திற்கு அருகாமையில் உள்ள பாரிய நீர் நிரம்பிய கிடங்கில் தவறி வீழ்ந்து மூழ்க்கியுள்ளனர்.
இதன்போது குறித்த பகுதியில் நின்ற இளைஞர்கள் மற்றும், பொதுமக்கள் ஆகியோர் மூழ்கியவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு உதவியாக இராணுவத்தினர் மற்றும் வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினரும் அங்கு வருகைதந்திருந்தனர்.
இந்நிலையில் ஒரு மணிநேரத்தின் பின்னர் நீரில் மூழ்கிய இருவரும் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் ஏற்கனவே அவர்கள் மரணித்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் வவுனியா பட்டானிச்சூர் முஸ்லீம் மகாவித்தியாத்தில் கல்விகற்கும் 15மற்றும் 16வயதை உடைய இருமாணவர்களே சாவடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.
இதனை அவதானித்த குழுவொன்று அவர் மீது தாக்குதலை முன்னெடுத்தது. இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழ்நிலை ஏற்ப்பட்டது. இந்நிலையில் அங்கு வருகைதந்த விசேட அதிரடிப்படையினர் நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுடன், பொலிசாரின் பாதுகாப்புடன் துணைவேந்தர் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.