யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அகற்றுவதற்கு முயற்சி நடப்பதாக யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அகற்றுவதற்கு முயற்சி நடப்பதாக யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் உதயன் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த பத்திரிகை செய்தியில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மே 18 நினைவுத்தூபியை மீண்டும் அந்த
இடத்திலிருந்து அகற்றுவதற்கு பல தரப்புகளும் பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவரும், விசுவமடு மற்றும் கட்டுடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமகன்கள் என தம்மை அடையாளப்படுத்திக்
கொண்டுள்ள இருவருமாக மேற்கொண்ட முறைப்பாடுகளையடுத்து அது தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
இதன் முதல் கட்டமாக இந்தத் தூபியை அமைப்பது தொடர்பில் செலவழிக்கப்பட்ட நிதி விவரங்கள் மற்றும் பெறப்பட்ட அனுமதிகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்
தலைவர் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இவர் மீதான விசாரணைகள் நாளை
மறுதினம் 19ஆம் திகதி வியாழக்கிழமை
இடம்பெறவுள்ளது. அதேவேளை பாதுகாப்புத் தரப்பும் இதன் அடிப்படையில் அந்தத் தூபியை
அகற்றுவதற்கான நகர்வுகளை மேற்
கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்தத் தூபி முறையான அனுமதிகள்
எதுவுமின்றி கட்டப்பட்டதாக 2021ஆம்
ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இடித்து
அகற்றப்பட்டிருந்தது. இதனையடுத்து
எழுந்த எதிர்ப்புகள் மற்றும் அழுத்தங்களின் காரணமாக அதனை அவ்விடத்தில் அமைப்பதற்கு அப்போதைய அரச
தலைமையோ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிர்வாகமோ எதிர்ப்பு எதனையும் தெரிவிக்காத நிலையில் அந்தத் தூபி மீண்டும் அமைக்கப்பட்டதுடன் வருடாந்தம் மே 18 நிகழ்வுகள்
பல்கலைக்கழக சமூகத்தால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது – என்றுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் தூபியின் பின்னணி
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி 2021 ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.
இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர்.
மாணவர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு முன்வந்த பல்கலை நிர்வாகம் 2021 ஜனவரி 11 ஆம் திகதி துணைவேந்தரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீண்டும் அதே இடத்தில் 2021 ஏப்ரல் 23 ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
வருடாவருடம் மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் நினைவேந்தலில் ஈடுபடுவது வழக்கமாகும்.