வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் 50 இலட்சம் ரூபா பெறுமதியான வீடு திட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக...
வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் 50 இலட்சம் ரூபா பெறுமதியான வீடு திட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏதும் தெரியாது என அவிபிருத்திக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
நேற்று வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபி விருத்திக் குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற அபி விருத்தி கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
அபிவிருத்தி கலந்துரையாடலின் போது இணைத் தலைவர்களில் ஒருவரான வட மாகாண ஆளுநர் யாழ் மாவட்டத்தில் மட்டும் 50 இலட்சம் ரூபா வீடு திட்ட பயனாளிகள் விண்ணப்பித்தது குறைவாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் யாழ் மாவட்டத்தில் சுமார் 16 ஆயிரம் பேருக்கு வீடு தேவை ஆனால் குறித்த வீட்டுத் திட்டம் தொடர்பில் மக்களுக்கு ஐயப்பாடு உள்ளது.
50 இலட்சம் ரூபா வீட்டுத்திட்டத்தில் எவ்வளவு வீட்டுக்கு எவ்வளவு சூரிய மின்கலத்துக்கு என சரியான தகவல் இல்லை.
வீட்டைக் கட்டி முடித்த பின் மக்களுக்கு வருமானம் இல்லாமல் வீட்டில் பெறப்படும் சூரிய சக்தி மின்சாரத்தை குறித்த நிறுவனமே 15 வருடங்களுக்கு பெறப்போவதாகக் கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாது குறித்த வீட்டின் உறுதிகள் பயனாளிகளுக்கு வழங்கப்படுமா என்ற சந்தேகம் இருக்கும் நிலையில் பலர் விண்ணப்பிக்காமல் விட்டிருக்கலாமே தவிர வீடு தேவையில்லை என கூற முடியாது என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிதரன் பாராளுமன்ற உறுப்பினர்களாக நாங்கள் இருந்தும் குறித்த திட்டம் தொடர்பில் எமக்கு ஏதும் தெரியாது நேர்மையான சாதகமான திட்டங்கள் என்றால் எங்களையும் அழையுங்கள் நிறுவனத்திடம் கேள்விகளைக் கேட்டு மக்களைத் தெளிவுபடுத்துகிறோம் என கூறினர்.
இதன் போது கருத்து தெரிவித்த வடமாகாண ஆளுநர் பிஎச்எம் சாள்ஸ் குறித்த நிறுவனத்தையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து ஒரு கலந்துரையாடலுக்கு நேரம் தருவதாக உறுதியளித்தார்