யாழில் அதிகரிக்கும் குழாய் கிணறுகளால் நிலத்தடி நீர் பாரிய ஆபத்தினை எதிர்நோக்கி உள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு எவ்வளவு நீர் வெளியேற்றப்படுகிறத...
யாழில் அதிகரிக்கும் குழாய் கிணறுகளால் நிலத்தடி நீர் பாரிய ஆபத்தினை எதிர்நோக்கி உள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு எவ்வளவு நீர் வெளியேற்றப்படுகிறது என்பதைக் கணிப்பிட முடியாத சூழல் உருவாகி உள்ளதாக யாழ் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியர் திருமதி ஞானேஸ்வரன் இராஜேந்திர மணி தெரிவித்தார்.
நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஹரிதாஸ் கியூ டெக்ஸ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் மற்றும் செயற்திட்டங்கள் தொடர்பில் விளக்கம் அளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கரிதாஸ் கியூ டெக்ஸ் நிறுவனமானது சுற்றுச்சூழல் தொடர்பான விடையங்களில் அக்கறையுடன் செயல்பட்டு வரும் நிறுவனம் என்ற வகையில் சூழலைப் பாதுகாக்கும் பல்வேறு வேலை திட்டங்களை செயற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் பல்வேறு விடயங்களை அரச திணைக்களங்களுக்கு வெளிப்படுத்துவதற்காக மேற்கொண்டுள்ளோம்.
யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் குழாய் கிணறுகளால் நிலத்தடி நீர் பாரிய ஆபத்தினை எதிர்நோக்கியுள்ள நிலையில் ஒரு நாளைக்கு குழாய் கிணறுகள் ஊடாக வெளியேற்றப்படும் நீரின் அளவை கூட கணிப்பிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
யாழ் குடா மூன்று பக்கமும் நீரினால் சூழப்பட்டு ஒரு பகுதியில் நிலத்துடன் இணைக்கப்பட்ட பிரதேசமாக காணப்படுகிற நிலையில் நீரினை ஆதாரமாகக் கொண்டே அனைத்து செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகிறது.
மனிதர்கள் தொடக்கம் விலங்குகள் வரை நிலத்தடி நீரை நம்பியே யாழ்குடாவில் தமது செயற்பாடுகளை வினைத்திறனாக மேற்கொள்வது எமக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு.
எமக்கு இரு கடல் நீர் ஏரிகள் மட்டும் உள்ள நிலையில் நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கு நீர் ஏந்துப் பிரதேசங்களை அதிகரிக்க வேண்டும்.
நீர்நிலைகள் நீரேந்துப் பிரதேசங்களில் உக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பொலித்தீன் வகைகள் சேர்வதை தடுப்பதற்கு பொதுமக்கள் உரிய வகையில் செயல்பட வேண்டும்.
கழிவு முகமைத்துவம் கழிவுகளை தரம் பிரித்தல் போன்ற செயற்பாடுகளில் பொதுமக்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றி சூழலுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் முகாமை செய்ய வேண்டும்.
ஆகவை குறித்த செயற்பாடு வெற்றி அளிப்பதற்கு பொதுமக்கள் சமூக நிறுவனங்கள் அரச நிறுவனங்கள் விழிப்புணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.