இந்தியா – தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நேற்று(02) முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் (NIA) தீவிர சோதனை நடத்தி வருகின்றனர் என அந்நாட்டு ஊடக...
இந்தியா – தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நேற்று(02) முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் (NIA) தீவிர சோதனை நடத்தி வருகின்றனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்களை இலக்கு வைத்து சோதனை நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தடை செய்யப்பட்ட அமைப்புகளிடமிருந்து வெளிநாடுகளில் இருந்து நன்கொடை திரட்டப்பட்டதாக வந்த தகவலின் பெயரில் தேடுதல் சோதனை நடத்தப்படுகிறது என்று என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் 10 நிர்வாகிகளின் இடங்களில் சோதனை நடத்தப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சீமான், “தேர்தல் நேரத்தில் இதெல்லாம் நடக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். எங்களை அச்சுறுத்தும் முயற்சியாக என்ஐஏ சோதனை நடைபெறுகிறது. நியாயப்படி என்.ஐ.ஏ அதிகாரிகள் என்னிடம்தான் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்.
அச்சுறுத்தலுக்கு அஞ்சும் நபர்கள் நாங்கள் இல்லை. சிறிய யூடியூப் சேனல் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு எப்படி நிதி திரட்ட முடியும்?. விடுதலைப் புலிகள் அமைப்பு எங்கிருக்கிறது? அதற்கு எப்படி பணம் திரட்ட முடியும்?. தேர்தல் சமயத்தில் என்னையும் கட்சியையும் முடக்க பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க.வின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. சோதனை நடைபெறுகிறது.
நாட்டை கொள்ளையடித்தவர்கள் அச்சமின்றி இருக்கும்போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும். சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். என்.ஐ.ஏ சோதனையின் மூலம் நான் சரியான பாதையில் செல்கிறேன் எனபது எனக்குத் தெரியவருகிறது. பெப்.5ம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்ட எங்கள் கட்சி நிர்வாகிகள் ஆஜராவார்கள். அந்த நிர்வாகிகளுடன் சேர்ந்து நானும் ஆஜராவேன்” என்று சீமான் தெரிவித்தார்.